ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சித்திரை திருத்தேர் விழாவினை தொடர்ந்து திரளான பக்தர்கள் சனிக்கிழமை வடம் பிடித்து தேரிழுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்புமிக்க ஸ்ரீகைலாசநாதர் கோவிலின் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இத்தேரோட்டத்தை சிவனடியார்கள் கைலாய மேளம், வாத்தியங்கள் வாசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
இக்கோவில் சித்திரை தேர் திருவிழா, கடந்த, ஏப்.30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கட்டளைதாரர்கள் சார்பில் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு வழிபாடு, திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை காலை உற்சவர் ஸ்ரீகைலாசநாதரை பக்தர்கள் ஒம் நமசிவாய கோஷத்துடன் தேரில் ஏற்றினர். தொடர்ந்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நகரமன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர் , மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.ரங்கசாமி, நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கவரைத்தெரு வழியாக இழுக்கப்பட்டு, கடைவீதியில் இடைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளான மே.11-ல் மீண்டும் தேரிழுக்கப்பட்டு, கச்சேரி வீதிவழியாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலை வந்து சேரும். மே.14-ல் சப்தாபரணம், மே.15-ல் வசந்தோற்சவம் நடைபெறும்.