நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள சிங்களாந்தபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்ப அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல ஆண்டு பிரச்சனைக்கு அதிகாரிகள் தீர்வு ஏற்படுத்தினர். சிங்களாந்தபுரம் அருகே காந்திநகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது காந்தி நகருக்கு செல்லும் சாலையை அப்பகுதியை சேர்ந்த சிலர் கம்பி வேலி அமைத்து பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்பகுகி மக்கள் பலமுறை புகார் அளித்தும் வருவாய்த்துறையினரும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கரிமிப்பை அகற்றக்கோரி ராசிபுரம்-சேந்தமங்கலம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது பொதுமக்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்த வழித்தடத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் நில ஆவணங்களை சரிபார்த்த இப்பகுதியில் பாதை வசதி உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கம்பி வேலி அகற்றினார். அப்போது இருதரப்பில் தள்ளுமுள்ளு , வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்து கொடுத்தனர். இதனால் பிரச்சனையில் சமரசம் ஏற்படுத்தப்பட்டது.

மறியல் நடத்தினால் தான் தீர்வு:
இது போன்ற மக்கள் பிரச்சனையில் மனு கொடுத்தும் பல மாதம் ஆகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினால் தான் தீர்வு ஏற்படும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இதனால் எந்த பிரச்சனை என்றாலும் மக்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல பிரச்சனகள் முடிவுக்கு வருகிறது. ஆனால் போராட்டம், மறியல் என சாலைக்கு வராத பொதுமக்கள் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது என்ற நிலை உள்ளது. உரிய காலத்தில் உரிய நடவடிக்கை அதிகாரிகள் எடுத்தால் இது போன்ற மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். செய்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்…