
நாமக்கல் மாவட்டம், பாச்சல் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துக்குமார சுவாமி மற்றும் சமயபுரத்து அம்மன் திருக்கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இதில் வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள பாச்சல் பகுதியில், அருள்மிகு முத்துக் குமாரசுவாமி மற்றும் சமயபுரத்தம்மன் திருக்கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 02-05-2025 வெள்ளிக் கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழாவில், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துக் குமாரசுவாமி, சமயபுரத்து மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து,மே.7-ல் நவ வீரர்கள் படைக்களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் பானை அழைத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் மே.8-ல் சிறப்பாக நடைபெற்றன.

முன்னதாக, முத்துக் குமாரசுவாமி திருக்கோவிலில் பூஜை கூடை அழைத்து, ஏராளமான தாய்மார்கள் பொங்கல் வைத்தனர். மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது. அடுத்து மாலையில் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற சுவாமிகளுக்கு அலகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்கள், தொடை அலகு, வேல் அலகு குத்தி, கோவில் வளாகத்தை சுற்றி ஊர்வலமாக ஆடிப்பாடி வந்து, செல்லியம்மன் கோவில் பூஜையில் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பாச்சல் அருள்மிகு முத்துக்குமார் சுவாமி மற்றும் சமயபுரத்து அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை, பாச்சல் ஊர் நாட்டாமைக்காரர், பெரியதனக்காரர், காரியக்காரர்கள், உறவின் முறையினர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த விழாவில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.