ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் நோயாளிகள் நலச் சங்க ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மருத்துவமனை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) அ.ராஜ்மோகன், ராசிபுரம் டிஎஸ்பி.,விஜயகுமார், துணை இயக்குநர்கள் வாசுதேவன் (காசநோய்), ஜெயந்தினி (தொழுநோய்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவமனை நோயாளிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், சேவை சங்கத்தினர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா பேசியதாவது:
தமிழக முதல்வர் ஏழை, எளிய எனவே, தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமை. அரசு மருத்துவமனைகளில் அவசர கால சிக்கலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவர்களின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அரசு மருத்துவமனையை நாடி வர வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகளவில் மகப்பேறு சிகிச்சைகள் பிரசவங்கள் நடந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இம்மாதம் மருத்துவமனையில் 110 முதல் 120 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. மகப்பேறு சிகிச்சை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தினசரி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை யோகா வகுப்புகள் நடத்திட வேண்டும். யோகா பயிற்சி மூலம் சுகப்பிரவசங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் தோல் நோய், குழந்தைகள் பிரிவு, மூட்டுவலி, காசநோய் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. காசநோய் உள்ளிட்ட நோய்களை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கட்டாயம் குணபடுத்த முடியும். தற்போது காசநோய் நவீன முறையில் உடனடியாக கண்டறியப்பட்டு 6 மாத சிகிச்சை அளித்து குணப்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ அருகிலோ எவருக்கேனும் காசநோய் தொற்று இருப்பின் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகிறது என விழிப்புணயர்வு ஏற்படுத்திட வேண்டும்.
அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தரமான சத்தான உணவு வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதந்தோறும் 2 -வது வியாழக்கிழமை முகாம் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் தேவையான சக்கர நாற்காலி, ஊன்றுகோல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பெற்று பயன்பெற முடியும். எனவே, பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைகளை பெற முன்வர வேண்டும். அரசு மருத்துவமனை உங்களது உரிமை என்பதை உணர வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மருத்துவர்கள், பணியாளர்களிடம் தங்களுக்கு தேவையான வசதிகள், கருவிகள், உபகரணங்கள் குறித்தும், 108 அவசர ஊர்தி சேவை, அமரர் ஊர்தி சேவை குறித்தும், மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்துவது, ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் விபரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம், உணவின் தரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரவச பகுதி, ரத்த வங்கி, பெண்கள் பிரிவு, சலவையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கலந்துரையாடினார்.
ரோட்டரி சங்கத்தின் சேவைக்கு பாராட்டு
கூட்டத்தில் மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் சிபிஆர் கருவி உள்ளிட்ட ரத்த வங்கி, குழந்தைகள் நல பிரிவுக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கிய ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம்.முருகானந்தம், கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், இ.ஆர்.சுரேந்திரன், வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகளை ஆட்சியர் பாராட்டி சால்வை அணிவித்து கெளரவித்தார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.