ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனர்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் எதிரே மருந்து கடைகள், உணவகங்கள், பெட்டிக்கடைகள், பேக்கரி கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகள் என ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் கடைகள், கடையின் போர்டுகள் மறைத்து வியாபாரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் அளவிற்கு பலரும் விளம்பர தட்டிகள், பேனர்கள் இரவோடு இரவாக கட்டி வைத்து செல்வதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாக பல இடங்களில் பேனர்கள் நகராட்சி, காவல்துறை அனுமதியின்றி வைக்கப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் பிறந்த தினம், மாநாடு, நினைவு அஞ்சலி, திருவிழா போன்றவற்றிக்கு இது போன்ற பேனர்கள் பெரிய அளவில் வாகன ஒட்டுநர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு வைக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற பேனர்கள், தட்டிகள் வைக்கப்படுவதை தடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை. சாதாரணமானவர்கள் வைக்கும் பேனர்கள், தட்டிகள் வைத்தால் கேள்வி கேட்கும் அரசு நிர்வாகம், காவல்துறையினர் இது போன்ற தட்டிகளை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இது போன்ற பேனர் கலாச்சாரம் நகரில் அதிகரித்து வருகிறது.
சாலையோர கடைகளால் போக்குவரத்து நெருக்கடி:
மேலும் நகரில் பல இடங்களில் சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகளும் அதிகரித்து வருதவால் போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்துவதுடன், விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. ஏற்கனவே குருகலான ராசிபுரம் நகரில் இது போன்ற சாலையோர கடைகளால் விபத்து ஆபத்து ஏற்படுவதுடன், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே அனுமதியின்றி செயல்படும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவதுடன், தட்டிகள், பேனர்கள் வைப்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விபத்துகள் தடுக்க முடியும் என வியாபாரிகளும், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.