தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளை சார்பில் ராசிபுரம் கருவூல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய துணைச்செயலாளர் மு.கதிர்வேல் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் இரா.ஜெகநாதன், கொ.கதிரேசன், பி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் சு.சிதம்பரம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்திப் பேசினர். ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளர் முருக.செல்வராசன் பங்கேற்று ஆர்பாட்டம் குறித்து விளக்கிக்கூறினார்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியமே மறு நியமன காலத்திற்கு ஊதியமாக வழங்க வேண்டும், மாத ஊதியத்தில், 20 சதவீதம் ஊதிய வெட்டு, ஊதிய இழப்பு ஏற்படுத்தி பணி நிறைவு ஆசிரியர்களிடம் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சந்தாதொகை பிடித்தம் செய்யப்படுவதை முற்றிலும் கைவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, கடன் கணக்கு ஆணைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும், ஆசிரியருக்கு புதிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் பிரிவு மாவட்டத் தலைவர் கு.பாரதி, நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலர் பெ.மோகன்குமார், ஒன்றியப்பொருளாளர் க.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.