நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் வருகிற மார்ச் 30ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என நாமக்கல்லில் நடைபெற்ற விழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட நாயுடு நல சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும், யுகாதி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுகாதி விழா, வருகிற மார்ச் 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் ஆண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள SPS திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு யுகாதி விழா துவங்குகிறது. இதில் நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கத்தின் நிறுவனர் தா.ஜெயராமுலு நாயுடு நினைவு நூற்றாண்டு விழா நடைப்பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மணமாலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் சுமார் 700 மணமகன், மணமகள் ஜாதகங்கள் பார்த்தல் நிகழ்ச்சி இடம் பெறும். காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 95 கிளைச் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். மாலை 3 மணி முதல் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி, பாட்டுப் போட்டி, நடனப்போட்டி மற்றும் மகளிருக்கான கோலப் போட்டியும் நடைபெறும். தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். 27ம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து நாயுடு சமூக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேச உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்க தலைவர் ஆடிட்டர் வெங்கடசுப்ரமணியன், செயலாளர் நாராயாணன், பொருளாளர் தங்கவேல், தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜு, துணைத்தலைவர் ஏ.வி.ஆர்.வெங்கடேசன், துணைச் செயலாளர்கள் ரோகிணி செல்வராஜ், தனபால் , இளைஞர் அணி நிர்வாகிகள் சக்தி வெங்கடேஷ், சதீஷ்குமார், வெங்கடாசலம், ஜெகதீசன் , அன்பழகன், கோவிந்தசாமி, மகளிர் அணி ரேகா, ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி, ராதாபாய், விஜயலட்சுமி உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைச் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.