நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதி சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டரான இவரது மகன் கவின்ராஜ் (14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர் பள்ளி இடைவேளையில், கழிவறைக்கு சென்ற போது
திடீரென மயங்கி விழுந்தாராம். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு திரண்ட உறவினர்கள், மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார் ஆய்வாளர் எஸ்.சுகவனம் வட்டாட்சியர் எஸ்.சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசி மரியாதை கைவிடச் செய்தனர். பின்னர் மாணவர் சடத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர், வருவாய் துறையினர் ,கல்வித் துறையினர் பள்ளியில் ஆசிரியர்கள் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவர் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்சனை இருந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.