ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. முத்துக்காளிப்பட்டி ஸ்ரீராம்நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் கோமதி (48), இவர் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள கைத்தறி சங்கத்தில் காசாளாராக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தனது இரு மகள்களுடன் முத்துக்காளிப்பட்டியில் வசித்து வருகிறாராம். இந்நிலையில் வழக்கம் போல் பணிக்கு சென்றிருந்தபோது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்து 20 நகைகள் திருடப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டிக்கு திரும்பிய இவர் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், ஆய்வாளர் சுகவனம், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், கீதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேற்கொண்டு இந்த திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





