நாமக்கல் மாவட்டம் அருகே புதுச்சத்திரம் அடுத்துள்ள கதிராநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (58) மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ரிக் வாகனத்தில் ஓட்டுநராக உள்ள அவரது சகோதரர் மகன் குமரவேல் (45) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை கோபால் தனது மனைவியுடன் தனது வீட்டில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் வெளியில் சென்றார். அப்போது அவர், கதிராநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது அவரது சகோதரர் மகனான குமரவேல் வழிமறித்துள்ளார். அப்போது, தனது தாத்தா பெயரில் உள்ள பூர்வீக சொத்தை தனது தந்தைக்கு பிரித்து தர வேண்டும் என கேட்டார். அதற்கு கோபால் மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலை குமரவேல் சரமாரியாக தாக்கியுள்ளார். அரிவாளை திருப்பி வைத்து தாக்கியதால் கோபால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கோபாலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட குமரவேலை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோபால் மீது குமரவேல் அரிவாளால் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..