ஆங்கிலேயர் காலம் முதல் செயல்பட்டு வரும் ராசிபுரம் கிளைச் சிறைச்சாலை மூடுவதற்கு சிறைத்துறை முடிவு செய்துள்ளதால், 125 ஆண்டு பழமையான இந்த சிறைச்சாலையின் செயல்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.
நாடு முழுவதும் பாதுகாப்பற்றி முறையிலும், போதிய வசதிகளின்றியும், குறைவான கைதிகளுடனும் செயல்பட்டு வரும் சிறைச்சாலைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகுதியற்ற 18 சிறைகளை மூட சிறைத்துறை முடிவு செய்தது. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் செயல்படும் கிளைச்சிறையும் ஒன்று. 1898-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் இந்த கிளைச்சாலை செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் வருவாய்த்துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்த கிளைச்சிறைச்சாலை 1983-ம் ஆண்டு முதல் சிறைத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் தற்போதைய கரூவூலம் அருகில் செயல்பட்டு வரும் இந்த கிளைச்சிறையின் பணிகள் முடிவுக்கு வருகின்றன. ராசிபுரம் கிளைச்சிறை 6 அறைகளுடன் (செல்கள்) 34 கைதிகள் தங்கும் வகையில் இட வசதி கொண்டது. இங்கு சிறு குற்றங்கள் புரிந்தவர்கள் மட்டுமே அடைக்கப்பட்ட வருகின்றனர். இதில் தற்சமயம் கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஒருவரின் நிலையின் கீழ் 13 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கிளைச்சிறை மூடப்பட்டு மாவட்ட சிறைச்சாலையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் 125 ஆண்டுகால சிறை செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன.