ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், இதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என மாவட்ட வனத்துறை அலுவலர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய வனப்பகுதியான அலவாய்மலைப்பகுதியின் அருகேயுள்ளது அத்தனூர். இந்த மலையடிவாரத்தை ஒட்டியப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவிலும் இரவு நேரத்தில் சாலையை விலங்கு ஒன்று கடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்களிடம் தகவல் பரவியது. இதனையடுத்து ராசிபுரம் வனத்துறையினர் அப்பகுதியில் அலுவாய்மலையின் வனப்பகுதியிலும் ஆய்வு செய்தனர். ஆனால் காட்டுப்பூனை அல்லது புணுகுபூனையாக இருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவிக்கையில், இது போன்ற சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான கால் தடபதிவு ஏதும் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தை தவிர்க்க ராசிபுரம் வனவர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்ட அப்பகுதியில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் யாரும் இது குறித்து அச்சப்படதேவையில்லை என்றார்.