ராசிபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து ஆய்வு நடத்தப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் எல்.மதுபாலன், நாம்ககல் வட்டார வடக்கு போக்குவரத்து அலுவலர் எம்.பதுவைநாதன் அஆகியோர் உத்தவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செண்பகவல்லி, சரவணன் ஆகியோர் ராசிபுரம் – சேலம் செல்லும் பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்கு தனியார் பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தெரியவந்தது. மேலும் பயண கட்டணத்திற்கு முறையான டிக்கெட் வழங்கப்படவில்லையாம். இதனையடுத்து பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்பட்ட பயண கட்டணத்தை விட கூடுதலாக பயண கட்டணம் வசூலித்தால் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.பதுவைநாதன் தெரிவித்துள்ளார்.




