நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் கோவையில் 32-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்து 567 குழு மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி சார்பாக 23 குழு மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஐந்து குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களில், நான்கு குழுக்கள் வெற்றி பெற்று மேற்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டிக்கு சென்றனர். அதில் ஒரு குழு வெற்றி பெற்று மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றது. மாநில அளவிலான போட்டி, புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் பிப். 15,16, நாட்களில் நடைபெற்றது. இப்போட்டியில் 125 குழுக்கள் பங்கேற்றனர், இதில் குமாரபாளையம் மேற்கு காலனி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மகத்ராஜ், மெதுன்ஷாந்த் குழு வெற்றி பெற்று இஸ்ரோ விஞ்ஞானி இந்திரசால் கைகளால் பரிசுகளையும் கேடயங்களையும் பெற்றனர். இம்மாணவர்களை ஊக்கப்படுத்தி வழிகாட்டிய பள்ளி அறிவியல் ஆசிரியை ஜாஸ்மின் ஸ்டார்லாட் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர் குணசேகரன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் கௌசல்யா மணி அனைவரையும் வாழ்த்தினார்.





