நாமக்கல், ராசிபுரம், சேலம், திருச்செங்கோடு போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு சென்றதன் அடிப்படையில் பேருந்துகள் மீது பலமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தனியார் பேருந்து ஒட்டுநர்கள் செய்வதை செய்யுங்கள் என்ற போக்கில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் பயணிகளுக்கு கொடுக்கும் டிக்கெட்டில் பஸ் பெயரோ, பஸ் நெம்பரோ, கட்டண விவரமோ இருக்காத வகையில் டிக்கெட் கொடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்ல ரூ.20-க்கு பதிலாக ரூ.23 என்றும், ராசிபுரத்தில்இருந்து திருச்செங்கோடு செல்ல ரூ.23 லிருந்து ரூ.30 என்றும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்ற நிலையில், ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், ராசிபுரம், மற்றும் திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் வடக்கு) எம்.பதுவைநாதன் உத்தரவின் பேரிலும் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
இதில் அனுமதிக்குப் புறம்பாக தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 8 டாட்டா ஏஸ் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் கொண்டுவரப்பட்டு மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அனுமதிக்க புறம்பாக அதிகம் பாரம் ஏற்றி இயக்கப்பட்ட மூன்று கனரக சரக்கு வாகனங்கள் மீது சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் அதிக பயண கட்டணம் வசூலிக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு சோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாகன தணிக்கை மூலமாக அரசுக்கு சுமார் 2.50 லட்சம் ரூபாய் வருவாய் வரும் வகையில் இணக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனத் தணிக்கையில் ஓட்டுநர்களுக்கு தகுதிச் சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அனுமதிக்கு புறம்பாக அதிக பாரம் ஏற்றி இயக்கப்படக் கூடாது எனவும் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஒட்டுனர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது போன்ற வாகன தணிக்கை ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை,ஆயில்பட்டி, மங்களபுரம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.பதுவைநாதன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை மேற்கொண்டும், மாவட்ட ஆட்சியர், மோட்டார் போக்குவரத்து அலுவலர்கள் உத்தரவை மீறி தனியார் பேருந்து ஒட்டுநர்கள் தொடர்ந்து அதி கட்டணம் வசூலிப்பதன் பின்னணியில் நடந்தது என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தனியார் பேருந்துகள் நடத்துவதில் சிரமம்:
தனியார் பேருந்துகள் உரிமையாளர்களுக்கு இன்சூரன்ஸ், டயர் விலை, டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஒட்டுநர், நடத்துநர் சம்பளம் உயர்வு போன்றவற்றில் உள்ள கூடுதல் சுமை அனைவரும் அறிந்தது தான். அதன் அடிப்படையில் தற்போது டிக்கெட் விலை குறைவு தான் என்பதையும் மறுக்க இயலாது. இருப்பினும், உயர்த்த வேண்டிய காரணங்களை அரசுக்கு எடுத்துக்கூறி முறையாக அனுமதி பெற்று உயர்த்த நடவடிக்கை எடுப்பதை விட்டு, தான்தோன்றி தனமாக உயர்த்தினால் பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்பதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்




