வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் ஒன்றியக் கிளையின் செயலாளர் இர.ஜெகந்நாதன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கை:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் சுமார் 150 ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள். இவ்வாசிரியர்களுக்கு பிப்ரவரி 4 தேதி ஆகியும் ஜனவரி 2025 மாத ஊதியம் வெண்ணந்தூர் வட்டார கல்வி அலுவலர் அவர்களால் பெற்று வழங்கப்படவில்லை. இதனால் வெண்ணந்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகியுள்ளார்கள். இது முழுக்க முழுக்க வட்டார கல்வி அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்களின் மெத்தன போக்கே காரணமாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் வேலை செய்தும் இதுவரை சம்பளம் வராததால் வீட்டு வாடகை , கடன் ,தனிநபர் கடன் தவணை கடன் போன்ற கடன்களுக்கு ஒன்று முதல் ஐந்து தேதிகளுக்கு பெரும்பாலும் சம்பளம்வந்ததும் கட்டி விடலாம் என எண்ணியிருந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்று வழங்காதது பேரிடியாக உள்ளது. எனவே ஆசிரியர்களுக்கான சம்பளம் உடன் வழங்கப்பட வேண்டும்