தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் ஒரு சுற்றுலா வேனில் தேனிமாவட்டத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் தர்மபுரி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இவர்கள் சென்ற சுற்றுலா வேன் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது முன்னால் காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற டிரைலர் லாரி மெதுவாக சென்றதால், வேன் டிரைவர் பிரேக் போட்டுள்ளனார்.

இதனால் இந்த வேனுக்கு பின்னால் வந்த மற்றொரு சுற்றுலா வேன் முன்னால் சென்ற வேன் மீது மோதியது. இதில் தர்மபுரி இதில் மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மேம்பாலத்தை ஒட்டிய இணைப்புச் சாலை வழியாக பிற வாகனங்களை திருப்பிவிட்டனர்.
இதே வேளையில் சதுரகிரி சென்று விட்டு கிருஷ்ணகிரி நோக்கி 12 பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த ஒரு வேன், விபத்து பகுதியில் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் இந்த வேன் கவிழ்ந்துள்ளது. அதிலிருந்த பக்தர்கள் அனைவரும் காயமடைந்தனர். இந்த வேனுக்கு பின்னாள் வந்த எய்ஸர் வாகனமும் இந்த வேனில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் காயமடைந்தோர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவில் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சுற்றுலா வேன்கள் மேற்பட்ட விபத்திற்கு உள்ளானதில், 3 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





