ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இப்பிரச்சனையில் மனுதாரர்கள், பொதுமக்கள் கருத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதாக ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையம் நகரில் இருந்து மிக தொலைவில் உள்ளதால் இதனை மாற்றம் செய்யக்கூடாது என ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தினர். மேலும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் மனு மீது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் பொது அறிவிப்பு வெளியிட்டு மனுதாரர்கள், பொது மக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்சனையில் பல விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்துள்ளதாக ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய மீட்புக்குழுவின் நிர்வாகிகள் எம்.பாலசுப்பிரமணியம், நா.ஜோதிபாசு ஆகியோர், பேருந்து நிலைய மாற்றம் குறித்து கண்துடைப்புக்காக கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு, அன்றைய தினமே தனியார் நிலத்தை தானமாகப் பெற்று பத்திரப்பதிவு நடந்ததுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தல் நடைமுறையில் இருந்த 19-04-24 அன்றைய தினத்தில் நிலம் தானம் பெற்றுக்கொள்ள நகராட்சி ஆணையாளருக்கு நகர்மன்றம் எழுதிய கடிதத்திலும் விதிமீறல் நடைபெற்றுள்ளது. எனவே இதன் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளதாக மீட்புக்குழுவினர் கூறினர்.