தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு பழனி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் பொருளாளர் பி சின்னராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை சமாளிக்க நேர்மையான இளைஞர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்புரை வழங்கிய லோக் ஆயுக்தா நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார் அவர் பேசியதாவது.

கடந்த 1988 முதல் 4 ஆண்டுகள் பழனி எல்ஐசி பழனி கிளையில் முகவராக பணியாற்றினேன். அப்போது முகவர்களின் முன்னேற்றத்திற்காக எவ்வித சங்கமும் கிடையாது. அவர்களை ஒருங்கிணைத்து பழனி எல்ஐசி முகவர்கள் சங்கத்தை உருவாக்கி ஓராண்டு காலம் தலைவராக பணியாற்றினேன். 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழனி எல்ஐசி முகவர்கள் சங்கம் 34 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எல்ஐசி முகவர்களின் ஒற்றுமையின் மூலம் அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட்டிருக்கிறது என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நாட்டு மக்களிடையே ஒற்றுமை என்பது நாட்டை முன்னேற்றுவதற்கான, மனித வளர்ச்சிக்கான ஆயுதம். அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தும் மனிதர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் கயவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. லஞ்சம் வாங்கும் மனிதர்களிடமும் ஊழல்வாதிகளிடமும் ஒற்றுமை ஓங்கி நிற்கிறது. ஆனால் சமுதாயம் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களிடம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்களிடம், நேர்மையான மக்களிடம் ஒற்றுமை இல்லை ஏனெனில், நேர்மையாளர்களை ஒருங்கிணைக்க தன்னார்வ அமைப்புகள் சமூகத்தில் குறைவாக உள்ளன என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்
லஞ்ச லாவண்யமற்ற சமுதாயத்தை உருவாக்கிட, நுகர்வோரை ஏமாற்றும் வணிகர்களை அகற்றிட, வருங்கால இந்தியாவின் தூண்களான குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை பாதுகாத்து இந்திய தேசத்தை முன்னேற்ற ஒவ்வொரு கிராமங்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் தன்னார்வ அமைப்புகள் அதிகரிக்க வேண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்
இத்தகைய தன்னார்வ சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் சாதி, மதம் போன்ற வட்டங்களுக்கு அப்பாற்பட்டும் இயங்குவதாக இருக்க வேண்டும். இவற்றை வழிநடத்த நேர்மையான இளைஞர்கள் முன் வர வேண்டும். இதன் மூலம் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க இயலும். அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் அரசின் கடைநிலை ஊழியர் வரை அரசு பணியாளர்கள் மீதான ஊழல் குறித்த புகார்களை தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்கலாம். இத்தகைய புகார்கள் எவ்வாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற முழுமையான விவரம் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படையான ஆட்சி முறையும் நல்லாட்சிக்கு தூண்களாக விளங்குகின்றன என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
விழாவில் பழனி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர். வி. முத்துக்குமார், பொருளாளர் எஸ். ஜெயராமன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் சிவ கணபதி, அரிமா சங்க மாவட்ட தலைவர் டாக்டர் பி பி என் விமல் குமார், புள்ளியல் துறை இணை இயக்குனர் பி மயில்சாமி, போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் பி. ஈஸ்வரன், பூங்கா இதழ் பத்திரிகை ஆசிரியர் பொருளூர் செல்வா உள்ளிட்ட பலர் வாழ்த்து பேசினார்கள். முன்னதாக, பழனி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாபு வரவேற்புரையும், இறுதியாக பழனி எல்ஐசி தலைவர் கிளப் உறுப்பினர் ராமசாமி நன்றியுரையும் ஆற்றினார்கள். நிகழ்வில் ஏராளமான எல்ஐசி முகவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.