நாமக்கல்லில் வழக்கறிஞராக உள்ள ஏ. குணசேகரன் மகன் ஜி.சுதேஸ்வரன் (27) பார்மசியில் டாக்டர் பட்டம் படித்து விட்டு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிளிப்கார்ட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனத்தின் மீது 100 கோடி கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பிளிப்கார்ட் இணையதளத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க பிளிப்கார்ட் இணையதளம் மூலமாக கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் மாத இறுதியில் ரூ 87,548/- ஐ சுதேஸ்வரன் செலுத்தியுள்ளார். வாடிக்கையாளரின் வீட்டிலேயே ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும் என்று சுரேஷ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், 2024 அக்டோபர் முதல் வாரத்தில் ஸ்கூட்டர் வந்துவிட்டதாகவும் அருகாமையில் உள்ள ஓலா ஷோரூமில் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ள சுதேஸ்வரன் ஷோரூம் சென்றபோது அதனை வழங்க தாங்கள் சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் வேறு வழியின்றி இன்சூரன்ஸ்காக பணத்தை அவர் செலுத்தியுள்ளார் அதன் பின்னர் வாகனத்தை ஒப்படைக்க நிறைவேற்ற கட்டணமாக (fulfilment) ரூ 4,280/- வழங்க வேண்டும் என்று ஷோரூம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெலிவரி கட்டணம் உட்பட முழு பணத்தையும் செலுத்தி விட்டதாக சுதேஸ்வரன் தெரிவித்த போது வாகனத்தை வழங்க ஷோரூம் நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி 2024 நவம்பர் மாத இறுதியில் அந்த பணத்தை செலுத்தி அவர் வாகனத்தை பெற்றுள்ளார்.
இரண்டு மாதங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நாமக்கல் ஓலா ஷோரூமில் இருந்து தொலைபேசியில் சுதேஸ்வரனை அழைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கான மானிய தொகை பெறுவதற்கு நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சுதேஸ்வரன் ஷோரூமுக்கு சென்று விவரம் கேட்டபோது மானியத்தொகை கம்பனிக்கு கிடைக்கக் கூடியது என தெரிவித்துள்ளனர். இந்த நிபந்தனை எதுவும் வாகனத்தை வாங்கும் போது தெரிவிக்கப்படவில்லை என்று கூறிவிட்டு சுதேஸ்வரன் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஓலா பிரதிநிதிகள் இரண்டு நாட்களுக்குள் வந்து மானிய தொகை நடைமுறையை முடிக்க விட்டால் வண்டியை லாக் செய்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர் ஆனால், இவ்வாறு தெரிவித்த மறுநாளே ஸ்கூட்டரில் சுதேஸ்வரன் சென்று கொண்டிருந்தபோது ஓலா நிறுவனத்திடம் உள்ள சென்சார் கட்டுப்பாடு மூலம் வண்டியை லாக் செய்து விட்டனர். இது குறித்து நாமக்கல் ஷோரூமுக்கு பேசியும் அவர்கள் வாகனத்தை அன்லாக் செய்ய மறுத்து விட்டனர். இதனால் ஸ்கூட்டரை வேறு வாகன மூலம் வீட்டுக்கு சுதேஸ்வரன் எடுத்து வந்துள்ளார்.
வாகனத்தை விற்றுவிட்டு விற்பனையாளரிடம் உள்ள சென்சார் கட்டுப்பாட்டு கருவி மூலம் எவ்வித அறிவிப்பும் வழங்காமல் வாகனத்தை லாக் செய்தது தவறு என்றும் ஓலா நிறுவனத்தின் செயல் நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் இதனால் வாகனத்தை எடுத்துக் கொண்டு செலுத்திய பணத்தை திரும்பத் தருமாறும் ஓலா நிறுவனத்தின் நேர்மையற்ற வணிக நடைமுறையால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ5,00,000/- இழப்பீட்டை தமக்கு வழங்க வேண்டும் என்றும் சுதேஸ்வரன் இன்று நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் தம்மை போல பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கு இழப்பீடாக ரூபாய் 100 கோடியை ஓலா நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அதனை நுகர்வோர் நலநிதியில் செலுத்தி தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் புகாரில் கேட்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு பின்னர், 48 மணி நேரத்தில் சுதேஸ்வரனின் ஸ்கூட்டர் இயங்கும்படி சென்சார் லாக்கை நீக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் ஓலா நிறுவனத்துக்கும் ஓலா நிறுவனத்தின் குமாரபாளையம் மற்றும் நாமக்கல் கிளைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் அவர்கள் வரும் மார்ச் 13 அன்று பதிலளிக்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.