ராசிபுரம் புறநகர் பேருந்து நிலையம் மக்கள் வசதிக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் குறிப்பிட்டார்.
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் மா.மதிவேந்தன் வி.நகர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற வேன் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசினார்.
நகரில் வீதி வீதியாக சென்ற அவர், திமுகவிற்கு ஆதரவு கேட்டு பேசியது: ராசிபுரம் நகராட்சியைச் சுற்றி மூன்று நீர்நிலை ஏரிகள் அமைந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக நகரம் விரிவடையாமல் வளர்ச்சி பெறாமல் முடங்கிப் போயுள்ளது. மக்களின் நீண்ட காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, தி.மு.க. அரசு ராசிபுரம் மக்களின் வசதிக்காக ரூ.140 கோடி மதிப்பீட்டில் அணைப்பாளையம் பகுதியில் மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வந்து பணிகள் நடந்து வருகிறது. இந்த மருந்துவமனைக்கு கிராம மக்கள் மற்றும் நோயாளிகள் எளிதாக வந்து செல்லப் புறநகர் பேருந்து நிலையம் மிகவும் வசதியாக இருக்கும்.
‘பறநகர் பஸ் நிலையம் அமைப்பதால் தற்போது நகருக்குள் உள்ள பேருந்து நிலையம் மூடப்படாது. அது வழக்கம் போல் செயல்படும். நகருக்குள் இருக்கும் தற்போதய பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு மக்கள் விரைவாகச் சென்று வர வசதியாக புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் நகர மக்கள் எந்தவித பாதிப்பும் இன்றி புதிய பேருந்து நிலையம் சென்று வரமுடியும். அதேபோல் தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்கு இந்த பேருந்து நிலையம் வசதியாக இருக்கும். ஏது மக்களுக்கு தேவையோ அதை தான் திமுக அரசு செய்யும் என்றார்.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., : வி.நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வேட்பாளர் மா.மதிவேந்தனை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேசியது: கடந்த 2021-ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றபோது, ராசிபுரம் நகர சாலைகள் குண்டும் குழியாக இருந்தது. இதனால் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து தற்போது எங்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் குடிநீர் பிரச்சனை என்பதே இல்லை என்ற அளவிற்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படுகிறது. அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, முதலமைச்சர் சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். முன்னதாக பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதில் திமுக நகர் செயலர் என்.ஆர்.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





