நாமக்கல் மாவட்டத்தின் பொதுமக்களின் கோரிக்கைகள் எளிதில் தீர்வு காணும் வகையில் நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின் பேரில் ”தீர்வு எனும் மக்களுக்கான டிஜிட்டல் சேவை தளம்” என்ற வசதி தொடக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள பாச்சல் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை தமிழக அமைச்சர்கள் கே.ஜி.அருண்ராஜ், விஜயலட்சுமி, த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கான விழா பாவை கல்வி நிறுவன கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சி.எஸ்.திலீப் (நாமக்கல்), பொ.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன், பால்வளத்துறை அமைச்சர் விஜயலக்ஷ்மி சின்னசாமி ஆகியோர் பங்கேற்று ”தீர்வு பொதுமக்களுக்கான டிஜிட்டல் சேவை தளத்தினை” தொடங்கி வைத்து, இத்தளத்திற்கான கியூ ஆர் கோட் அட்டையினை முதற்கட்டமாக அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஒட்டும் வகையில் அலுவலர்களிடம் வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் ”தீர்வு எனும் மக்களுக்கான டிஜிட்டல் சேவை தளம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது நாமக்கல் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு தனி நபர் இருந்த இடத்திலிருந்து கியூ ஆர் ஸ்கேன் முறையில் பதிவிடும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுப்பும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிப் பார்வையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் போன்ற பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் 15 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் ”தீர்வு - மக்களுக்கான டிஜிட்டல் சேவை” மூலம் தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் இ.மாதவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் வெ.முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பி.செல்வவிஜயராணி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கு.சி.புருசோத்தமன் (இடைநிலை), பா.சாந்தி (பொ) (தனியார் பள்ளிகள்), பச்சமுத்து (தொடக்க கல்வி), பாவை கல்வி நிறுவனங்கள் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் உட்பட பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





