சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 80 வயது முதியவருக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி என்கிற ஊமையன் (80), கூலித் தொழிலாளி. கடந்த 2020 ஆம் ஆண்டு முத்துசாமி என்கிற ஊமையன் உட்பட மொத்தம் 12 பேர், அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் பேரில் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஏற்கனவே வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான முத்துசாமி என்கின்ற ஊமையனுக்கு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி எழில்வேலவன் தனது தீர்ப்பில் முத்துசாமி என்கின்ற ஊமையனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500-ம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.




