திருவாரூரில் மே.5-ல் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் கடைகளுக்கு விடுமுறை அளித்த குடும்பத்துடன் வணிகர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மே 5ம் தேதி வணிகர் தினத்தன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு திருவாரூரில் மதியம் 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்த, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாட்டு பிரகடன தீர்மானம் வாசிக்கிறார். பேரமைப்பின் மாநில தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் மாநாடு தீர்மான உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக லெஜண்ட் குழுமத்தின் தலைவர் லெஜண்ட் சரவணன், தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜெலானி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் வணிக பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார்கள்.
மாநாட்டு நிகழ்ச்சியில் அனைத்து இந்திய வணிகர் சம்மேள நிர்வாகிகள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வருகிற மே 5ம் தேதி கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். வணிகர் உரிமையை மீட்டெடுக்கவும், வணிகர் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வணிகர் இன வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் திருவாரூர் மாநாட்டு திடலில் வணிகர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம். தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கனக்கான வணிகர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 200க்கு மேற்பட்ட வாகனங்களில் சுமார் 5000 வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.





