ராசிபுரம் YELLOW EDUSOFTஎன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கோடை கால பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல், மே மாதம் இந்நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சியளிக்கப்பட்டது. எம்.எஸ்.வோர்டு, எக்ஸெல், பவர்பாய்ன்ட், ஏ.ஐ., ஆங்கில தட்டச்சு, பேச்சாற்றல், தலைமைப்பண்பு போன்ற பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்சிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

ஜேஎஸ்எஸ் மக்கள் கல்வி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பங்கேற்ற மாணவர்களுக்கும் முகாமில் பயிற்சியளித்தனர். இதில் எல்லோ எடுசாப்ட் நிறுவனத்தின் தலைமை மேலாளர் பி.தாரணி மேற்பார்வையில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கணினி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இந்த கோடைகால பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா ஞானமணி என்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் YELLOW EDUSOFT நிறுவனர் டி.மோகன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி , ஞானமணி கல்லூரி உதவிப் பேராசிரியர் ஏ.வெங்கடேஷ், மிஸ்சர்ஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற டி.கெளசல்யா ஆகியோர் பங்கேற்று பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ராசிபுரம் சிவில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.சதீஸ்குமார், ஜேஎஸ்எஸ் மக்கள் கல்வி நிறுவனத்தின் வடமலை உள்ளிட்ட ஜேசீஸ், ஜேகாமர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.