அதிமுக கட்சியினர் சார்பில் சேந்தமங்கலம்- கொல்லிமலை பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி 71-வது பிறந்த தினவிழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
சேந்தமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ., சி.சந்திரசேகரன், கடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் அதிமுகவில் இருந்து விலகி செயல்பட்டு வந்தார். தற்போது அவர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும்,முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி முன்னிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், சி.சந்திரசேகரன் தலைமையில் கொல்லிமலை-சேந்தமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் எடப்பாடி கே.பழனிசாமியன் 71-வது பிறந்த தினம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்டங்கள் வழங்கியும் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து காரவள்ளி, வளப்பூர்நாடு, வாழவந்தி நாடு, தேவனூர் நாடு உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற பிறந்த தினவிழாவில், மலைவாழ் மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தட்டுகள், சேலைகள் வழங்கப்பட்டன. பல இடங்களில் கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக மீண்டும் கட்சியில் இணைந்த அவரை நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி செயலர் இளங்கோ சிவக்குமார், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலர் ராஜா, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ஸ்ரீபாலன், சேந்தமங்கலம் முன்னாள் பேரூர் செயலர் ராஜேந்திரன், செவிந்திப்பட்டி கிளை செயலர் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.