மதுராந்தகத்தில் நடைபெறும் வணிகர்கள் தினமாநாட்டிற்கு வியாபாரிகள் கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கப்பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:


மே 5ம் தேதி வணிகர் தினத்தன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மதியம் 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை வகிக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்த, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாடு தீர்மானம் வாசிக்கிறார். பேரமைப்பின் மண்டல தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.




இம்மாநாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார். மேலும் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அனைத்து இந்திய வணிகர் சம்மேள நிர்வாகிகள், பல்வேறு தொழில் சார்ந்த தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

வருகிற மே 5ம் தேதி கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். வணிகர் உரிமையை மீட்டெடுக்கவும், வணிகர் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வணிகர் இன வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் இம்மாநாட்டு திடலில் வணிகர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம். தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கனக்கான வணிகர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 200க்கு மேற்பட்ட வாகனங்களில் சுமார் 5000 வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.