ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு வெப்பக்காலங்களில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பிள்ளாநல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கே.செல்வி தலைமையில் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பொதுமக்களுக்கு உயர் வெப்ப அலை காலங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் இருப்பது என்றும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எவ்வாறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து தீ விபத்தை உடனடியாக தடுத்து மருத்துவமனைகள் உள்ள நோயாளிகளை பாதுகாப்பது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், தீவிபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முதல் உதவி சிகிச்சை , பொருட்சேதம் தடுப்பது எப்படி என்பது குறித்தும் செயல்விளக்க தீத் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சியளித்தனர். இதில் ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெ.பலகார ராமசாமி உள்ளிட்ட நிலைய பணியாளர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.