ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் அத்தனூர் சின்ன ஏரியில் நீர்வளத்துறை சார்பில் 2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 பணிகளில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் மொத்தம் 68.05 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.1.68 கோடிமதிப்பிலான இப்பணியினை அத்தனூர் சின்ன ஏரி பகுதியில் வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.

இதற்கான பணியை தொடங்கி வைத்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் விழாவில் பேசுகையில் – நீர்வளத்துறை-2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகளின் நீர் ஆதாரங்களை தூர்வார நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கலில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடிவதற்கும் ஏதுவாக, 2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், நீர் ஆதாரங்களை தூர்வார நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 23 பணிகள் 68.05 கி.மீ நீளம் தூர்வார ரூ.1.64 கோடி மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுவதற்கு முன் முடிக்கப்படும்.
இதில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் மொத்தம் 7 பணிகள் 24.95 கி.மீ நீளத்திற்கு ரூ.38.50 லட்சத்திலும், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரட்டாறு பகுதியில் மொத்தம் 1 பணிகள் 1.90 கி.மீ நீளத்திற்கு ரூ.8 லட்சத்திலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் 6 பணிகள் 17.05 கி.மீ நீளத்திற்கு ரூ.48.15 லட்சத்திலும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் 7 பணிகள் 18 கி.மீ நீளத்திற்கு ரூ.52.60 லட்சத்திலும், திருச்செங்கோடு சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட ஆறுகள், வாய்க்கால்கள் மொத்தம் 2 பணிகள் 6.15 கி.மீ நீளத்திற்கு ரூ.16.50 லட்சத்திலும் தூர்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடையும் போது, அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் பாசன வாய்க்கால்களின் மூலம் உரியநேரத்தில் கண்மாய்கள் மற்றும் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையும். மேலும், வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக்கும்.
நாமக்கல் மாவட்டத்தில் தூர்வாரப்படும் பணிகளில் தேங்கல்பாளையம் கிராமத்திலுள்ள அத்தனூர் ஏரி வழிந்தோடி வாய்க்கால் தூர்வாரும் பணி ரூ.5 லட்சத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்க்காலானது 1.50 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்படவுள்ளது. இதன் மூலம் 98.78 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். அத்தனூர் ஏரியின் வழிந்தோடி வாய்க்காலில் வண்டல்மண் படிந்து ஆங்காங்கே கரைகள் அரிக்கப்பட்டு முட்செடிகள் மற்றும் புதர்கள் மண்டி நீரோட்டத்திற்கு இடையூறாகவும், ஆங்காங்கே வாய்காலில் சேதமடைந்துள்ளதால் முழுமையான நீரோட்டம் தங்குதடையின்றி செல்ல அத்தனூர் ஏரியின் வழிந்தோடி வாய்க்கால் தூர்வாருவது அத்தியாவசியமாகிறது. வழிந்தோடி வாய்க்கால் தூர்வாருவதன் மூலம் ஏரிகளுக்கு நீரோட்டத்தினை முழுமையாக கொண்டு செல்லவும், கரை உடைப்பு வெள்ளநீர் வடிதல் நீர் விரயத்தை தடுக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அட்மாக்குழுத் தலைவர்கள் கே.பி.ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, அத்தனூர் பேரூராட்சித் தலைவர் சின்னசாமி, துணைத் தலைவர் கண்ணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி செயற்பொறியாளர்கள் பிரபு, விஜயகுமார் உட்பட துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.