முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலை செல்லும் பாதையில் நரியன்காடு அருகே சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை நடந்தது.

புதுச்சேரி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் வெள்ளிக்கிழமை கொல்லிமலைக்கு சென்றுள்ளனர. பேளுக்குறிச்சி பகுதியில் செயல்படும் இரவு நேர மளிகை பொருட்கள் சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு கொல்லிமலையில் சுற்றுப்பார்த்த பயணிகள் சென்ற வேனில் சனிக்கிழமை ஊர் திரும்பியுள்ளனர். கொல்லிமலையில் இருந்து திரும்பும் போது முள்ளுக்குறிச்சி அருகே நரியன்காடு பகுதியில் வளைவில் வேன் பிரேக் பிடிக்காமல் சென்றதால், டயரில் சத்தம் வந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளை எச்சரித்த வேன் ஒட்டுனர் அங்குள்ள திருப்பத்தில் செடி கொடிகள் மரங்கள் உள்ள புதரின் மோதி நிறுத்தினார். இதில் வேன் சாய்ந்து கவிழ்ந்த நிலையில் நின்றது. இதில் வேனில் பலருக்கு காயமேற்றப்பட்டது. இதில் படுகாயமடைந்த டிரைவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாமக்கல்,ராசிபுரம், ஆத்தூர் போன்ற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நால்வருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். இது குறித்து செங்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.