நாமகிரிப்பேட்டை, இரா.புதுப்பட்டி, பட்டணம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ச.உமா வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, வேலன் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பெருமாள் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரம், அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் பதிவேடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
இரா.புதுப்பட்டி பேரூராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், பட்டணம் பேரூராட்சி, குச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் பயன்பெறும் பொது மக்களின் விபரம், நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் வார்டு எண்:1, 2 மற்றும் 15 உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும், தார்சாலை அமைக்க பயன்படுத்தப்படும் கற்களின் தரம், சாலையின் நீளம், அகலம் அளவீடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்த காலத்திற்குள் சாலை பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, பழையபாளையத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வங்கி கடன் காசோலைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி அட்டையினை வழங்கினார்.