தேர்தல் நேரத்தில் பட்டியலின மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிபடியாக அரசு நிறைவேற்றும் என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரூ.15.98 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழாவில் அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்றார்.

மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர், புதுச்சத்திரம், ராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 6 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1 முடிவுற்றபணிகளை தொடங்கி வைத்தும் பேசினார். முன்னதாக விழாவில் நாமக்கல் ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு எம்எல்ஏ., இ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற அமைச்சர் மா.மதிவேந்தன் பேசுகையில், தமிழக முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக பட்டியலின பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். மாவட்டத்தில் பட்டியலின மக்களின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரியமணலியில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு சமுதாய கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பீமரப்பட்டியில் புதியதாக கிராம அறிவுசார் மையம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டியலின மக்கள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும். விரைவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, ரூ.4.56 கோடி மதிப்பீட்டில் வையப்பமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலுக்கு தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ சார்பில், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பீமரப்பட்டியில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதியதாக கிராம அறிவுசார் மையம் கட்டும் பணி, ரூ.77.89 லட்சம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், புதூர் கிராம அறிவுசார் மையம் கட்டும் பணி, ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஆரியூர், ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காரைக்குறிச்சியில் கிராம அறிவுசார் மையங்கள் கட்டும் பணிகள், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கபிலர்மலையில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி, ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 150 மாணவியர்கள் தங்கும் வகையில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டும் பணி என திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.