நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அளவாய்பட்டி கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவரின் மகன்கள் நவீன் குமார் (34), பிரவீன் குமார் (32). இவர்கள் இருவரும் மைனராக இருந்தபோது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 18 ஆயிரத்தை கடந்த 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முருகேசனின் தந்தை கருப்பண கவுண்டர் அளவாய் பட்டியில் விநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்துள்ளார்.

டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு 15 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 3,06,448/- ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் வழங்குவதாக கூட்டுறவு சங்கம் டெபாசிட் சான்றிதழை வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு கருப்பண கவுண்டர் இறந்துவிட்டார். நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் 18 வயது நிறைவடைந்த நிலையில் டெபாசிட் காலம் முடிவடைந்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தை அணுகி பணத்தை கேட்டுள்ளார்கள். ஆனால், 2003 ஆம் ஆண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஏழு சதவீத வட்டி வழங்க உத்தரவு இருப்பதால் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டொன்றுக்கு ஏழு சதவீத வட்டி மட்டுமே வழங்குவோம் என கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் பிரவீன் குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கம் மீது தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்கம் ஆஜராகாததால் ஒருதலை பட்ச தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கூட்டுறவு சங்கம் சார்பில் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நவீன் குமார், பிரவீன் குமார் ஆகியோர் வழக்குகளை 2025 ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மூன்று மாதத்தில் தீர்ப்பு வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு மாநில நுகர்வோர் ஆணையம் இரண்டு வழக்குகளையும் அனுப்பி வைத்தது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜனவரி 20, 24, 27 ஆகிய மூன்று தினங்களில் சாட்சிகளை விசாரித்து இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ் தலைமையில் ஜனவரி 28 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் டெபாசிட் சான்றிதழில் உள்ளவாறு ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3,06,448/- வழங்கவும் டெபாசிட் முதிர்ச்சி அடைந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ரூ 3,06,448/- க்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறு சதவீத வட்டி வழங்கவும் கூட்டுறவு சங்கம் ஒப்புக்கொண்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்ட நாளில் இருந்து எட்டு நாட்களுக்குள் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையையும் முடித்து சமரச பேச்சுவார்த்தை மூலம் வழக்கு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் 2025 பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் முதிர்ச்சி தொகையும் அதன் பிந்தைய வட்டியையும் நவீன் குமாருக்கும் பிரவீன் குமாருக்கும் கூட்டுறவு சங்கம் வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ ராமராஜ், உறுப்பினர்கள் ஆர் ரமோலா, என் லட்சுமணன் (2025 பிப்ரவரி 04- ல்) ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.