மக்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாக வேறு கணக்குக்கு மாற்றி கொள்வதற்காக சைபர் குற்றவாளிகள் இணையதள லிங்க்களை அனுப்பி வைக்கிறார்கள். இது மோசடிக்கான லிங்க் என்பது தெரியாமல் சாதாரண மக்கள் லிங்க் மூலம் உள்ளே செல்லும் போது பணத்தை சைபர் குற்றவாளிகள் திருடி விடுகிறார்கள். இவ்வாறு வங்கியில் இருந்து பணத்தை மோசடியாளர்கள் திருடாமல் இருக்கும் வகையில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி மகன் விசுவ மூர்த்தி. இவர் திருச்செங்கோட்டில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கி கணக்கை போன் பே (PhonePe) பேமெண்ட் ஆப்பில் இணைத்துள்ளார். கடந்த 2020 ஜூலை மாதத்தில் பொருட்களை விற்பனை செய்யும் பூட்மோ (Boodmo) என்ற இணையதளம் மூலம் டீசர்ட் ஒன்றை வாங்குவதற்காக போன் பே பேமென்ட் ஆப் மூலம் பணம் செலுத்தியுள்ளார். பின்னர் பர்ச்சேஸ் ஆர்டரை ரத்து செய்துவிட்டு பணத்தை திரும்ப வழங்குமாறு இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உடனடியாக விசுவ மூர்த்திக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர் தான் விற்பனை இணையதளத்தின் அலுவலர் எனக் கூறியுள்ளார். ஒரு லிங்கை அனுப்பி உள்ளதாகவும் அதில் விவரங்களை பதிவு செய்தால் பணம் உடனே திரும்ப அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மொபைலுக்கு வந்த லிங்க் விசுவ மூர்த்தி உள்ளே நுழைந்துள்ளார். அடுத்த நிமிடத்திலேயே விசுவ மூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்த ரூ 96,895/- அடையாளம் தெரியாத நான்கு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவரம் உடனடியாக விசுவமூர்த்திக்கு மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வந்துள்ளது.
வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் திருடப்பட்டு விட்டது என்பதை உணர்ந்த விஸ்வமூர்த்தி உடனடியாக திருச்செங்கோட்டில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளருக்கு தொலைபேசியில் நடந்த சம்பவங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மறுநாள் வங்கிக்கு நேரில் சென்று எழுத்து மூலமாக புகார் அளித்துள்ளார். பின்னர் வங்கியின் உயர் அலுவலர்களுக்கும் பலமுறை மின்னஞ்சல் மூலம் தமது பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அவருக்கு பணத்தை மீட்டுத் தர வங்கி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வங்கியின் மீது கடந்த 2024 ஜனவரி மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விஸ்வமூர்த்தி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் நேற்று 21-01-2025 அன்று தீர்ப்பளித்தனர். வாடிக்கையாளரின் புகாரை பெற்றுக் கொண்ட வங்கி நிர்வாகம் தரப்பில் மோசடியாக பணத்தை திருடியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குறைந்தபட்சம் முறையீட்டாளரின் பணத்தை மீட்க முயற்சி கூட செய்யாதது வங்கி புரிந்துள்ள சேவை குறைபாடு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மோசடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளருக்கு அந்த பணத்தை செலுத்த வேண்டும் என்று இம்மாத முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது என்றும் வாடிக்கையாளரின் பணத்துக்கு இழப்பு ஏற்படாத வகையில் இணையதள பாதுகாப்புகளை வங்கி நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான பண பரிவர்த்தனையால் ஏற்பட்ட இழப்பு ரூ 96,895/- ஐ மோசடி செய்த நாளிலிருந்து பணம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்று 9 சதவீத வட்டியுடனும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 25 ஆயிரத்தையும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வங்கி நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.