காரை வேகமாக ஓட்டிச் சென்றதால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என மறுத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் குட்டு: உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார் மனைவி கவிதா (53). இவரது மகன் சைலேஸ்வர் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் காரை ஓட்டிச் சென்றபோது பெருந்துறை அருகே விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த காருக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி) இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மகனின் இறப்பிற்குப் பின்பு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கவிதா விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். அதிக வேகமாக ஓட்டிச் சென்றதால் கார் விபத்து உள்ளானதால் இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா கடந்த 2024 நவம்பர் மாதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் சமராச பேச்சுவார்த்தைக்காக வழக்கறிஞர் பி குமரேசனை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமரச அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அடிப்படையில் ஒரு மாத காலத்துக்குள்ளாக இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ 9.30,000/- வழங்குமாறு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் (02-01-2025) தீர்ப்பளித்துள்ளது.
இதை போலவே மற்றொரு வழக்கில், நாமக்கல் நகரில் மோகனூர் சாலையில் வசித்து வரும் கே.வி.ராமசாமி மகன் கே.ஆர்.சுப்பிரமணியம் என்பவர் எல்ஐசி நிறுவனம் மீது தாக்கல் செய்திருந்த வழக்கில் சமராச பேச்சுவார்த்தைக்காக வழக்கறிஞர் ஆர். முரளி குமாரை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவிட்டார். சமரச பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்த கே. ஆர். சுப்பிரமணியத்துக்கு ரூ 2,83,336/- ஐ உடனடியாக (02-01-2025) பணம் (டிமாண்ட் டிராப்டாக) வழங்கப்பட்டது.