தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கள்ள லாட்டரி சீட்டுகள், போதைப் பொருள்கள் விற்பனை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். ராசிபுரம் நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்திட வேண்டும், பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மனு அளிக்கும் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிர்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் மாநில தவைர் ஆர்.டி.இளங்கோ தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் பழனிவேலு, மாநில இயக்குனர் சந்திரசேகர், ஈரோடு மாவட்ட தலைவர் சஞ்சய் சொக்கலிங்கம், மகளிரணி தொட்டியம் சித்ரா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் தீர்மானத்தை நகராட்சி த்து செய்ய வேண்டும், ஏடிசி டிப்போ, ஆண்டகலூர் கேட் ஆகிய பகுதியி்ல் இடம் தேர்வு செய்து பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் லாட்டரி, போதை பொருள் விநியோகத்தை இரும்பு கரம் கொண்டு அரசு தடுக்க வேண்டும். ராசிபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஒரு வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காவல்துறை உதவியுடன் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மின் வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து தீர்மான நகலை நகராட்சி ஆணையாளரிடம் நேரில் வழங்க சென்றனர். அப்போது மனுவை பெறுவதற்கு நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பானவர்கள் யாரும் இல்லை. இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மனு வழங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் தமிழ்நாடு மக்கள் உரி்மை பாதுகாப்பு மையத்தின் நிர்வாகிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.