ராசிபுரம் அருகே விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் காவல் ஆய்வாளருக்கு இரண்டை அரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை உறுதி செய்து மேல்முறையீட்டில் நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் கொழிஞ்சித் தோட்டத்தை சேர்ந்தவர் பழனியப்பன் என்பவர் மகன் வேலு (50). விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் இவரது பெரியப்பா குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இது குறித்து வேலுவின் தந்தை பழனியப்பன் கடந்த 1991 ஆம் ஆண்டு ராசிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் 2001-ல் பழனியப்பனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இருப்பினும் தொடர்ந்து இரு குடும்பத்தினர் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேலுவின் பெரியப்பா மகன் சவுந்தரராஜன் வேலு மீது வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அப்பொழுது வெண்ணந்தூர் ஆய்வாளராக இருந்த சுப்பிரமணியன் வேலு அழைத்து விசாரணை நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி லத்தியால் அடித்தாராம். பின்னர் வேலு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வேலு வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தன்னை கைது செய்த போது தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அச்சுறுத்தி ரூ.5500 பணமும் பெற்றுக் கொண்டு லத்தியால் தாக்கியதாக மனித உரிமை ஆணையத்திலும், காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்தார். ஆனால் ஐந்து ஆண்டுகளாக இதன்மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வேலு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் படி கடந்த 21.4.2022 அன்று ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் வெண்ணந்தூர் காவல் ஆய்வாளராக இருந்த சுப்பிரமணியத்துக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 2500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் நாமக்கல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் மேல் முறையிட்டு வழக்கினை விசாரித்த நாமக்கல் தாழ்த்தப்பட்டோருக்கான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம் 23.5.24 அன்று தீர்ப்பளித்தது. இதில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உறுதி செய்து காவல் ஆய்வாளரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஒய்வுபெற்ற காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் எ ன்பதும், அதில் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.