மதுரையில் மே.5-ல் நடைபெறும் வணிகர்கள் சங்க மாநாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மே 5ம் தேதி வணிகர் தினத்தன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை, வளையங்குளத்தில் மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்கிறார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநாடு தீர்மானம் பிரகடனம் வாசிக்கிறார். பேரமைப்பின் மண்டல தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
கவிஞர் வைரமுத்து மாநாட்டினை துவக்கி வைத்துப்பேசுகிறார். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்ற பேசவுள்ளனர். மேலும் இம்மாநாட்டில் அனைத்து இந்திய வணிகர் சம்மேள நிர்வாகிகளும், பல்வேறு தொழில் சார்ந்த தொழிலதிபர்களும், கலந்துகொள்கின்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து வணிகர்கள் கலந்துகொள்கிறார்கள். வருகிற மே 5ம் தேதி கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் திரளாக மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். வணிகர் உரிமையை மீட்டெடுக்கவும், வணிகர் பாதுகாப்பை உறுதிசெய்யவும், வணிகர் இன வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தவும் இம்மாநாட்டு திடலில் வணிகர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்.