குமாரபாளையத்தில் உயர் ஜவுளி தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமானது. குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 20 க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களும், 30க்கும் மேற்பட்ட நூற்பாலைகளும் செயல்பட்டு வருகின்றன.

ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென கழிவுப்பஞ்சு மூட்டைகள் இருக்கும் இடத்தில், மின் மோட்டாரில் ஏற்பட்ட தீப்பொறியால் அங்கிருந்த பஞ்சு முட்டைகளில் தீ பற்றி எரிந்தது. இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வெப்படை மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து தண்ணீரை பீச்சி அடைத்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதம் ஆகியது. மேலும் இயந்திரங்களும் தீயில் இரையாகின. இதில் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சேதமாக இருக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




