தேர்தலில் வாக்களிப்பதுடன் வாக்காளர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. தேர்தலுக்கு பின்னரும் அரசின் செயல்பாடுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சங்கத்தின் தலைவர் ஐ. ஜாம் ஜெகன் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது:
மனித உரிமைகளை பாதுகாக்க நல்லாட்சி அவசியமானது. நல்லாட்சிக்கு அடிப்படையானது ஜனநாயகம். உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது. தேர்தல்களில் வாக்களிப்பதுடன் வாக்காளர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேலைகளையும் கண்காணிக்க வேண்டியது வாக்காளர்களின் பணியாகும். ஊழல் விசாரணை ஊழல் புகார்கள் மீதான விசாரணை அமைப்பான லோக்பால், லோக் ஆயுக்தா, வெளிப்படையான நிர்வாகத்திற்கு உதவும் அமைப்பான தகவல் உரிமை ஆணையங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக நிர்வாக சீர்கேடுகளை வெளிக்கொண்டுவரும் பணியை வாக்காளர்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.





