வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற உறுதியோடு தொண்டர்கள் பணியாற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி குறிப்பிட்டார்.
ராசிபுரத்தில் நகர அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினார். இதில் அவர் மேலும் பேசியது:

மக்கள் எல்லாரும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி தலைமயைில் அமைய வேண்டும் என மக்கள் திரும்பும் பக்கமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக மக்களுக்கு எத்தனை கொடுமைகளை செய்துள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன் மத்திய அரசுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு மத்திய அரசின் திட்டங்கள் பெறமுடியாமல் போனது. திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக வாக்கு அரசியல் செய்து வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான இயக்கம் அதிமுக மட்டும் தான் என்பதை கட்சியினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதனையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நகராட்சி சொத்து வரி, குப்பை வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என ஏராளமான வரிகளை விதித்து மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது திமுக. இத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக என்பதே இல்லை என்ற நிலையை எடப்பாடியார் உருவாக்குவார். இதனை கருத்தில் கொண்டு அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற உறுதியோடு கட்சியினர் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒன்றியப் பகுதியானாலும், பேரூராட்சி பகுதியானாலும், நகரப் பகுதியானாலும் வாக்குசாவடி வாரியாக அதிமுக வாக்குகள் பெற்றுத்தரும் நிர்வாகிகளுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் தரப்படும் . யார் வேட்பாளர் என பார்க்கக்கூடாது. எடப்பாடியாரை முதலமைச்சராக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றிட வேண்டும். என்றார். இதே போல் முன்னதாக ராசிபுரம் ஒன்றியம், ஆர்.பட்டணம் பேரூர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திலும் பி.தங்கமணி பங்கேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ., கே.கலாவதி, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் கே.பி.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ஏ.வி.பி.முரளிபாலுசாமி, நிர்வாகிகள் எஸ்.வெங்கடாஜலம், டி.தமிழ்செல்வன், ஆர்.பி.சீனிவாசன், ராதாசந்திரசேகரன், வழக்குரைஞர் பூபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.





