ராசிபுரம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் வீட்டாரின் 30 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தொடர்பான போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெண்ணந்தூர் அருகேயுள்ள அறமத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆர்.கே.ராஜவேல். இவர் எலச்சிப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக உள்ள இவரது மகள் அகிலாராஜவேல் என்பவருக்கும், ராசிபுரம் நகரைச் சேர்ந்த ஆர்.பி.ராஜேந்திரன் என்பவரின் மகனான வேளாண்மைத்துறையில் பணியாற்றி வரும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கு திருமணம் ராசிபுரம் நீதிமன்றம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்நிலையில் மணப்பெண் வீட்டாருக்கு சொந்தமான நகைகள் 30 சவரன், ரொக்கம் ரூ.10 லட்சம் போன்றவை மணமேடையின் அருகேயுள்ள மணப்பெண் அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. இதில் மணப்பெண் வீட்டாருக்கு உறவினர்கள், நண்பர்கள் மூலம் மொய்யாக வந்த நகை, பணமும் இருந்ததாத கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்து அறையில் இருந்து பீரோவை பார்த்தபோது அதிலிருந்து நகை, ரொக்கம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடம் சென்ற ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார், உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மணப்பெண் தந்தை ராஜவேலு கொடுத்த புகாரின் பேரில் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்திவருகின்றனர்.