ராசிபுரம்,பிப்.17: ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோவிலின் மாசி சிவராத்திரி விழா கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பல்வேறு கட்டளைதார்களால் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அக்னி குண்டம் பற்றவைத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் முன்னதாக கோவில் பூசாரிகள் தீக்குண்டம் இறங்கிட திரளான பக்தர்கள் தீமித்து நேரித்தி கடன் செலுத்தினர்.

முன்னதாக கங்கணம் கட்டுதல், சக்தி கரகம் எடுத்தல் போன்றவற்றை தொடர்ந்து ராசிபுரம் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் உற்சவத்துடன் பக்தர்கள் மஞ்சள் , சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை அக்கினி சட்டியுடன் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.





