ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.பட்டணம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் விவசாயத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த 8 ஆடுகள் உயிரிழந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயி தோட்டத்துக்கு இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள் தங்களது கட்சியினருடன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினர்.

பட்டணம் பேரூராட்சி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (45), இவர் தனது தோட்டத்தில் 8 ஆடுகள்; 7 பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டடையில் அடைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் திங்கள்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் எதிரே வளர்ப்பு ஆடுகள் வெறிநாய்களால் குதறப்பட்டு உயிரிழந்து கிடந்தன. இதனையடுத்து தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் வி.சரோஜா ஆகியோர் தனி தனியாக விவசாயியின் தோட்டத்துக்கு சென்று உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசின் உதவிகள் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.





