நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராமத்தில் அரசு மதுபானக் கடை முன்பு பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் குறித்து தட்டிக் கேட்ட நமது தேடல் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் வெங்கடேஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பருத்திப்பள்ளி கிராம அரசு மதுபான கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையை செய்தியாக எடுத்து வெளியிட நமது தேடல் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நாமக்கல் மாவட்ட முதன்மை செய்தியாளர் வெங்கடேஷ் முயன்றபோது அங்கே இருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர் 100-ல் அழைத்து புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் காவலர் ஒருவர் சம்பவத்தை கேட்டு விட்டு திரும்பி சென்றுவிட்டார்.
பின்னர் அங்கிருந்த சிலர் நமது தேடல் செய்தியாளர் வெங்கடேஷ் தாக்கி, அவருடைய செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளனர். படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் சுந்தரராஜன், லோகநாதன், விஜயகுமார் ஆகியோர் ஈடுபட்டதாக வெங்கடேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
சமூகக் குறைகளை வெளிக்கொண்டு வந்து மக்களுக்காகப் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை கவலைக்குரியது. இதுபோன்ற செயல்களுக்கு போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் நாமக்கல் மாவட்ட காவல் துறையும் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





