ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் நடைபெற்ற வாகனச் சோதனையில் தகுதி சான்றிதழ் பெறாத 8 வாகனங்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இ.எஸ். முருகேசன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டார். இச்சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 டாட்டா ஏஸ் வாகனம், 1 பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஆயில்பட்டி காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தகுதி சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 டாட்டா ஏஸ் வாகனம் மற்றும் 1 கனரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இச்சிறப்பு தணிக்கையின் மூலம் அரசுக்கு சுமார் 1.60 லட்சம் இணக்கக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சிறப்பு வாகன தணிக்கை ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், மங்களபுரம் , ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இ.எஸ்.முருகேசன், ராசிபுரம் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.