ராசிபுரம் அருகேயுள்ள பேளுக்குறிச்சி காவல் நிலையத்தின் சிறப்பு பெண் காவல் உதவி ஆய்வாளர் காவல் நிலைய ஒய்வு அறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் காமாட்சி (48). இவர் இக்காவல் நிலையத்தில் கடந்த 21.9.23 முதல் பணியாற்றி வந்தார். இவர் ராசிபுரம் காவலர் குடியிருப்பில் குடியிருந்தார். ஏற்கனவே ராசிபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பேளுக்குறிச்சி காவல் நிலைய எல்லையில் ரோந்துப் பணியில் இருந்துள்ளார். பின்னர் இவர் உடல் நிலை சரியில்லா காரணத்தால் இரவு 2 மணி அளவில் ரோந்து பணியை முடித்துக்கொண்டு காவல் நிலையை ஒய்வு அறையில் தாழிட்டு தூங்கச்சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் மறுநாள் காலை 11 மணி மேலும் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் பெண் காவலர் உட்பட சக காவலர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையி்ல் இருந்தாராம். இதனையடுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இவரது பிரேதத்தை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பேளுக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவருக்கு பல உடல் பாதிப்புகள் உள்ள நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குடும்பத்தினர் புகார்: மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன் விளக்கம்-
சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்ததற்கு பணி சுமையே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணிசுமை காரணமாக உதவி ஆய்வாளர் காமாட்சி உயிரிழந்ததாக அவரசு சகோதரி கூறியதாக சில ஊடகங்களில் செய்து வெளியானது தவறானது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது உயிரிழந்த காமாட்சி கடந்த 90 நாட்களில் மருத்துவ விடுப்பு 40 நாட்கள் உட்பட மொத்தம் 46 நாட்கள் விடுமுறையில் இருந்துள்ளார். எனவே அவர் பணிசுமை காரணமாக உயிரிழந்ததாக கூறுவது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.