நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பருத்திப்பள்ளி கிராமத்தில் மூணு மாச மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் ஆகும். இக்கோவில் அம்மனை பருத்திப்பள்ளி, கருங்கல்பட்டி, வண்டிநத்தம், அவிநாசிபட்டி, ராமாபுரம், கூத்தம்பாளையம், வேலனம்பாளையம், சோமனம்பட்டி ஆகிய எட்டு ஊர்களைச் சேர்ந்த 15000 மேற்பட்ட குடும்பங்களை பல்வேறு சமுதாய மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த ஐந்து தலைமுறைகளாக குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த 135 குடும்பங்கள் பூஜை செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் கோயிலில் பூஜை செய்துவரும் சமுதாயத்தினரும் ஊர் பொதுமக்களும் பரஸ்பரமாக புகார் அளித்து வந்த நிலையில் இன்று எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராதா தலைமையில் இருதரப்பினரிடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஏரியில் மீன் பிடிப்பதில் பிரச்சனை
இரு தரப்பினரையும் அழைத்து பேசியதால் காவல் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பருத்திப்பள்ளி பகுதியில் 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்தசாரா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீன் பாசி குத்தகை ஏலம் குறிப்பிட்ட தொகைக்கு ஊர் பொதுவாக எடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விடுவது வழக்கம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கோயில்களுக்கு பிரித்து வழங்குவது என்பது கடந்த பல ஆண்டுகளாக நடைபெறும் நடைமுறையாகும் .ஆனால் 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயாக ஊருக்கு வழங்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன் பாசி குத்தகை ஏலம் எடுப்பதில் பூசாரி குடும்பத்தினர் தடையாக இருப்பதாக காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

பூசாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் தாங்கள்தான் பராமரித்து வருவதாகவும் ஆகையால் தங்களுக்கு கோயில் சொந்தம் என்றும் கூறுவதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த பத்தாண்டுகளாக இந்தக் கோயில் புனரமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது 95 சதவீத வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் கோயில் பணிகளை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கூடுதல் தொகை தேவைப்படுகிறது எனவே அதனை மீன் பாசி குத்தகை ஏலம் எடுப்பவர்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதிக பணம் கேட்பதாக பூசாரி குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள கோயில் இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்த வேண்டும் என்றும் அதனை நடத்துவதற்கு ஒரு விழா குழு அமைக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை பலமுறை கடிதம் அனுப்பியும் எந்த விதமான பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் விசாரித்த எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் ராதா ஏரியில் இரு தரப்பினரும் மீன்பிடிக்க கூடாது என்றும் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் பேரில் உத்தரவுகள் வரும் வரை எந்த வாக்குவாதமும் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்து இரு தரப்பினர் இடையே எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர். இந்த பிரச்சனையால் எலச்சிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.