ராசிபுரம் நகரில் குடிநீர் குழாய் வால்வு பராமரிப்பு பணிகளால் ஜூன்.9 முதல் ஜூன்.13 வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
ராசிபுரம் நகராட்சியில் உள்ள நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில், தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் முயற்சியில், தமிழக அரசால் ரூ.854 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான 99 சதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சில தினங்களில் புதிய திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் இணைக்கும் வகையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தின் மேல்நிலை நீர்நிலை தேக்கத் தொட்டியின் அருகில் மெயின் வால்வுப் பொருத்தும் பணிகள் ஜூன்.9- முதல் ஜூன். 13 வரை நடைபெற உள்ளது. இதனால் ராசிபுரம்- எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வழியாக தற்போது பெறப்படும் குடிநீர் பகிர்மானத்தை நிறுத்தி பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஐந்து நாட்களில் வால்வு பொருத்தம் பணிகள் நடைபெறும்.இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வழியாக ராசிபுரம் நகர பொது மக்களுக்கு குடிநீர் தொய்வின்றி வழங்கப்பட உள்ளது. எனவே இந்த ஐந்து நாட்களுக்கு குடிநீர் தேவைக்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.