ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாக ஒரு பெண் 6 அரை சவரன் நகைகள் தவறவிட்ட நிலையில் இதனை மீட்ட பெண் காவலர் நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலயைில், அவருக்கு காவல்துறையினர் பாராட்டி கெளரவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் செல்வி. இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வழக்கு தொடர்பாக மருத்துவரிடம் சான்று பெறுவதற்கு வெள்ளிக்கிழமை சென்றபோது, மருத்துமனை முன்பாக கைப்பை கீழே இருந்ததை எடுத்து பார்த்தார். அதில் நகைகள் இருந்ததையடுத்து இதனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கீதாவிடம் ஒப்படைத்தார். விசாரணையில் இதனை தவறவிட்டவர் ராசிபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி சித்ரா என்பதும், தனது அம்மா உடல் நிலை சரியில்லா நிலையில் வங்கியில் வைத்து கடன் பெற எடுத்துச்சென்ற போது தவறி கீழே விழுந்த நிலையில் தேடி வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையம் சென்ற போது நகை தவறிவிட்ட சித்ரா குறித்து தெரியவந்தது. இதனையடுத்து விசாரணைக்கு பின் நகைகள் சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பத்திரமாக மீட்டுக்கொடுத்த பெண் காவல் செல்விக்கு ராசிபுரம் டிஎஸ்பி., விஜயகுமார், உதவி ஆய்வாளர் கீதா உள்ளிட்ட காவலர்கள் பாராட்டு தெரிவித்து பரிசளித்து கெளரவித்தனர்.